மலேசியாவின் தற்போது ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 179,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2013 ல் ஐ.நா. அடையாள அட்டை கொண்ட அகதிகளின் எண்ணிக்கை 140,983 ஆக இருந்ததாகக் கூறியிருக்கிறார் மலேசிய உள்துறை அமைச்சர் Hamzah Zainudin.
மலேசியாவில் உள்ள அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை இதுவாக இருப்பினும், பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கான அகதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொடர்ந்து மலேசியாவில் தஞ்சமடையும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.
“அகதிகளின் வருகையை சமாளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ஐ.நா. அகதிகள் ஆணையத்துடன் செயல்பட்டு வருகிறோம்,” எனக் கூறியுள்ளார் மலேசிய உள்துறை அமைச்சர் Hamzah Zainudin.
மேலும் இதுகுறித்து பேசியுள்ள அவர், “மலேசியாவில் பெருமளவிலான அகதிகள் இருப்பதை மலேசியர்கள் விரும்பவில்லை. அகதிகளின் வருகை மலேசியாவில் பல்வேறு சமூக பிரச்சனைக்கு காரணமாக உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மலேசியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள போதிலும் எதிர்கட்சி ஊடகங்கள் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்க சொல்வது ஏன் எனத் தெரியாமல் குழம்பியிருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார் மலேசிய உள்துறை அமைச்சர் Hamzah Zainudin.