பிரேஸில், சென்டா கெத்தரீனா (Santa Catarina) மாநிலத்திலுள்ள புளூமெனாவ் (Blumenau) நகரில் உள்ள முன்பள்ளி மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் 4 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சுவர் ஏறிக்குதித்து அப் பள்ளிக்குள் நுழைந்த 25 வயது இளைஞன், மைதானத்தில் நிற்றிருந்த பிள்ளைகளை கோடாரி போன்ற ஆயுதம்கொண்டு வெறித்தனமாகத் தாக்கியுள்ளார். அதன்பிறகு மோட்டார்சைக்கிளில் ஏறி, மாநிலக் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் சரணடைந்தார்.
இதில் 3 ஆண் பிள்ளைகளும் 1 பெண் பிள்ளையும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் 5 வயதுக்கும் 7 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
மேலும், காயமுற்ற 4 பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட இளைஞன், சென்டா கெத்தரீனா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் இதற்கு முன்னர் 4 முறை கைது செய்யப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின்போது முன்பள்ளியில் இருந்த ஆசிரியர், சில பிள்ளைகளைக் கழிவறைக்குக் கொண்டுசென்று மறைத்துவைத்து அவர்களைக் காப்பாற்றியுள்ளார்.
குறித்த முன்பள்ளியில் தற்போது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெற்றோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்தக் கொடூரமான தாக்குதலை பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், இந்த வாரம் நடைபெறவிருந்த ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டம் ரத்தாகியுள்ளது. 30 நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.