கால அளவின்றி மனிதத்தன்மையற்ற வகையில் அகதிகள், குடியேறிகள் சிறைவைக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ஆஸ்திரேலிய அரசை, ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் குடிவரவுத் தடுப்பில் வைத்திருப்பதற்கான கால எல்லையை நிர்ணயிக்காமல் உள்ளதாக சித்திரவதை கண்காணிப்புக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அலையஸ் எட்வேர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாத கணக்குபடி, ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பில் உள்ள அகதி/குடியேறியின் சராசரி தடுப்புக் காலம் 780 நாட்களாக (சுமார் இரண்டு ஆண்டுகள்) உள்ளன.
இந்நிலையில், சித்திரவதை கண்காணிப்புக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண்ணும் முதல் ஆஸ்திரேலியருமான அலையஸ் எட்வேர்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் இத்தடுப்பு முறை தொடர்பான அவசர நடவடிக்கை தேவை என வலியுறுத்தியிருக்கிறார்.
அத்துடன், இந்த நீண்டகால கொள்கைக்கு தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சியும் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.
“அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்களை காலவரையின்றி சிறைவைப்பதை, 1992ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. பின்னர் ஆட்சிக்கு வந்த தாராளவாத கட்சியும் அதை நீட்டித்தது. இது தொடர்பாக சீர்திருத்தம் தேவை என தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி அரசாங்கத்திடம் நான் முறையிடுகிறேன்” என ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அலையஸ் எட்வேர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு மேல் தனிநபர்கள் எவ்வித முடிவுமின்றி, சட்டரீதியாக நிச்சயத்தன்மையற்ற நிலையில் வைக்கப்பட்டிருப்பது மனிதத்தன்மையற்ற அல்லது உளவியல் ரீதியிலான சித்திரவதை என வகைப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
“ஆஸ்திரேலியா போன்ற சட்ட, சமூக பொருளாதார அமைப்பை கொண்டுள்ள பெரும்பாலான நாடுகளில் 6 மாதங்கள் அனுமதிக்கப்பட்ட தடுப்புக்காவல் என்பதே தடுப்பிற்கான கால எல்லையாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இதை ஆஸ்திரேலியா செய்வது மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்” என ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அலையஸ் வலியுறுத்தியுள்ளார்.