பிரேசில் நாட்டை சேர்ந்த கெவன் அன்டோனியோ என்ற 23 வயது இளைஞன் கத்தியால் குத்தியதில், கோந்தம் தேஜஸ்வினி (வயது 27) என்று இந்திய யுவதி மரணித்துள்ளார்.
இங்கிலாந்து, லண்டனில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேஜஸ்வினிக்கு இந்தியாவில் அவரது சொந்த ஊரில் திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த தேஜஸ்வினி, மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு சென்றார். அங்கேயே தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார்.
லண்டனின் வெம்ப்லே என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிறிதொரு பெண்ணுடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தேஜஸ்வினியின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞன், தேஜஸ்வினியையும், அவருடன் தங்கியிருந்த பெண்ணையும் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இதையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்தனர்.
எனினும், அதற்குள் தேஜஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்றைய பெண்ணை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இதேவேளை, தேஜஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை இங்கிலாந்தில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.