அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் வெள்ளை மாளிகை வளாகத்தில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர்.
இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
முன்னெச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது.
பின்னர் அந்த பவுடர் போன்ற மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் இருந்தது கொக்கெய்ன் போதைப்பொருள் என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்வத்தின் போது ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இல்லை என குறிப்பிடப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப்பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.