நியூயோர்க் நகரில் ‘டிக்டாக்’செயலியை அரசுக்கு சொந்தமான சாதனங்களில் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகமானோர் உபயோகித்த ‘டிக்டாக்’ செயலி, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் சீனாவிற்கு சொந்தமான இந்தச் செயலியை தடை செய்தன.
இந்நிலையில், நியூயோர்க் நகர அரசாங்கம், ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்துள்ளது.
ஏற்கெனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாள்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “டிக்டாக், நகரின் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், டிக்டாக் இதனை மறுத்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாத்து வருவதாகவும், எந்தத் தகவல்களையும் சீன அரசுடன் பகிரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.