உலகிற்குத் தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வு கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயற்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவியிருக்கலாம் என தி வொஷிங்டன் ரைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீனாவில் வுஹான் மாநிலத்தில் மட்டும்தான் சீன அரசு உயிர்-ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வு கூடத்தை உருவாக்கி இருந்தது.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து வுஹான் வைராலஜி ஆய்வு நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இந்த ஆய்வு நிறுவனம் மட்டுமே முழுமையாக ஆபத்தான கிருமிகளைப் பற்றி மட்டும் ஆய்வு செய்யும் நிறுவனமாகும்.
இஸ்ரேல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியும், சீனாவின் உயிர்-ஆயுதங்கள் குறித்து அறிந்தவருமான டெனி ஷோஹம் வொஷிங்டன் ரைம்ஸ் நாளேட்டுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “சீனாவின் வுஹான் நகரில் மட்டும்தான் அந்நாட்டு அரசு ஆபத்தான கிருமிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தையும், ஆய்வுகூடங்களையும் உருவாக்கி நடத்தி வந்தது. இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்படும் கிருமிகள் மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
ஒருநேரத்தில் தங்களிடம் எந்தவிதமான உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வுகூடமும் இல்லை என சீனா மறுத்தது. ஆனால், அந்நாட்டில் அதுபோன்ற ஆய்வுகூடங்கள் மூலம் உயிர் ஆயுதங்கள் தயாரிப்பது உலகிற்குத் தெரியவந்தது. இந்த ஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கிறேன்.
ஆனால், சீனா இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. சீனாவின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு அமைப்பின் இயக்குநர் கவோ பு கூறுகையில், “வுஹான் நகரில் மிகப்பெரிய வீட்டு விலங்குகள், இறைச்சி சந்தை செயற்படுகிறது. இங்கிருந்துதான் கொரோனா வைரஸ் உருவாகியிருக்கும். இதற்கு வேறு காரணம் ஏதுமில்லை. அது அமெரிக்காவின் விஷமப் பிரசாரம்” எனத் தெரிவித்துள்ளார்.
வுஹான் ஆய்வு கூடங்களில்தான் மிகவும் ஆபத்தான சார்ஸ், ஹெ5என்1 இன்புளூவன்ஸா வைரஸ், ஜப்பானின் என்சிபொலிட்டிஸ், டெங்கு போன்ற வைரஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.