கொடிய கொரோனா வியாதிக்கு சீனாவில் மட்டும் 82 பேர் பலியாகியுள்ள நிலையில், கணிக்கத் தவறி விட்டோம், இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தம் என முதன் முறையாக உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
கொரோனா வியாதி தொடர்பில் கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால் சீனாவில் மட்டும் 82 பேர் பலியாகியுள்ளதுடன், ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியதை அடுத்து,கணிக்கத் தவறியதாக கூறி உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
சீனாவிற்கு வெளியே மொத்தம் 15 நாடுகள் அல்லது பிரதேசங்கள் தற்போது கொரோனா வியாதி பாதிப்புகள் குறித்து உறுதிப்படுத்தியுள்ளன.கம்போடியா சமீபத்திய முதல் கொரோனா வியாதி பாதிப்பை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இலங்கையில் சீன நாட்டவர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சீன தலைநகர் பீஜிங்கில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இதனிடையே இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று சீனாவில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி அவர்களில் பலருக்கும் தங்களுக்கு கொரோனா வியாதி பாதிக்கப்பட்டுள்ளதை தெரியாமல் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.