1
ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ஜப்பான் நாடு பசுபிக் “ரிங் ஓப் பயர்” ( Pacific Ring of Fire ) இல் அமைந்திருக்கிறது, இது தென்கிழக்காசியா மற்றும் பசுபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு நடவடிக்கைகளின் ஒரு வளைவு பகுதியாகும். இதனால் அடிக்கடி ஜப்பான் நாட்டில் நில நடுக்கம் ஏற்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டில், மியாகி மாகாணத்திற்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஒரு பெரிய சுனாமியாக அமைந்தது. அச் சுனாமியால் புகுஷிமா அணு உலை உடைத்தது. அத்துடன் சுமார் 16 ஆயிரம் பேர் உயிரிழக்க காரணமாகவும் அமைந்தது.
இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் பசுபிக் கடலின் அடியில் 41.7 கிலோமீட்டர் (26 மைல்) தூரத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது ஆனாலும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றும் கூறப்படுகிறது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ( Japan Meteorological Agency ) இந்த நிலநடுக்கத்தை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாகவும் 50 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாகவும், ஜப்பானின் நேரப்படி, அதிகாலை 5.30 மணிக்கு தாக்கியதாகவும் கூறியது. இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை எதையும் ஜப்பான் வெளியிடவில்லை.