கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, ஆஸ்திரேலியாவில் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காலிக விசாவில் உள்ள 20 லட்சம் வெளிநாட்டினர் நிர்கதியான சூழலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலமுறை நுழைவதற்கான சுற்றுலா விசா, மற்றும் தற்காலிக பணி விசாவில் உள்ள வெளிநாட்டினர், இந்த சூழ்நிலையில் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக கவலைத் தெரிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய இடப்பெயர்வு கவுன்சில்.
தொழில் முடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அக் கவுன்சிலின் தலைமை நிர்வாகி கர்லா வில்ஷிர் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல், தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து கவலைத் தெரிவித்துள்ளது லேபர் கட்சி.
தற்காலிக விசாவில் உள்ள பெருமளவிலான வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற முடியவில்லை என்றால், அவர்களுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து வேலைச்செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என லேபர் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது. இந்த நிலை, தொற்று பரவலுக்கு காரணமாகக்கூடிய ஆபத்துள்ளதாக எச்சரித்திருக்கிறது லேபர் கட்சி.