இந்தியாவில் முதலீடு செய்ய ஏற்ற மாநிலமாக தமிழகம் காணப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பிரிந்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பல்வேறு சுகாதார அம்சங்களில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்றுள்ளது. புதிய முக்கிய திட்டங்களை அறிமுகம் செய்தல், தரமான கொள்கைகளை புகுத்துதல், கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவை தமிழகத்தில் சுகாதாரம் மேம்பட முக்கிய பங்காற்றுகின்றன.
2018ஆம் ஆண்டில் பிராஸ் மற்றும் சல்லிவன், இந்திய மாநிலங்களின் தர வரிசையை பட்டியலிட்டு வெளியிட்டது. அதில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் இரண்டாவது இடத்தையும், முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக்கொண்ட மாநிலமாக முதல் இடத்தையும் தமிழகம் பெற்றிருந்தது.
இந்த ஆண்டு எனது அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு, உலகத்தின் பல்வேறு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, ஜப்பான், தென்கொரியா, தாய்வான், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களின் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.