அமெரிக்க அதிபர் டிரம்பும் அவரது பரிவாரமும் எதிர்வரும் பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை புரியவிருக்கின்றனர். அவர்கள் வருகையில் பல்வேறு முக்கிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவிருக்கின்றன.
முக்கியமாக 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இராணுவ ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்காக அமெரிக்க இராணுவத் தளவாட தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திலிருந்து வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட விருக்கிறது.
மேலும், 1.86 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஏவுகணை எதிர்ப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கான பேரங்களும் நடைபெற்று வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளவாட தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் F-15EX ஈகிள் போர்விமானங்களை இந்திய விமானப்படைக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
இந்திய விமானப்படைக்கு சுமார் 18 பில்லியன் மதிப்புள்ள 114 போர் விமானங்களை விற்பனை செய்வதற்காக அமெரிக்க ஆணையத்திடம் லைசன்ஸ் விண்ணப்பித்துள்ளது.
மேலும் 2.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள MH-60R சீஹாக் கடற்படை ஹெலிகாப்டர்களை விற்பனை செய்யும் ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் இருப்பதாக அரசாங்க மற்றும் அந்நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இந்த ஒப்பந்தங்களை அனுமதிக்கவிருக்கிறது.
இந்த வகை ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய கடந்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. பழைய பிரிட்டிஷ் சீ கிங் ஹெலிகாப்டர்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்த புதிய ஹெலிகாப்டர்களை இந்தியக் கடற்படையில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.