பொதுமுடக்கம் மற்றும் போக்குவரத்து தடை ஆகியவற்றை தமிழக அரசு விலக்க வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் வைகோ மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கின்றது.
வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. ஆனால், அவை போதுமானதாக இல்லை.
அதேவேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டது. அதனால் ஏழை, எளிய, மக்களின் அமைதி பறிபோய்விட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் பெருகி வருகின்றன.
மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 இலட்சம் பேருக்கு வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.
குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு அந்தப் பாடத்தை படிப்பதற்கான கணினி, திறன், தொலைபேசி வசதிகள் இல்லை.
இதேவேளை, மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு, தனது எல்லைகளைத் திறந்துவிட்டது. தமிழ் நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது.
எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும். அரசுப் பேருந்துகளைக் கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும் என ம.தி.மு.க.வின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.