தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்து 41ஆயிரத்து 993ஆக பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 60பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் எட்டாயிரத்து 811ஆக உயர்ந்துள்ளன. சென்னையில் மட்டும் ஒரேநாளில் 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழகம் முழுவதும் ஐயாயிரத்து 206 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 86ஆயிரத்து 479ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 46ஆயிரத்து 703 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இன்று அதிகபட்சமாக 84 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 62 இலட்சத்து 74 ஆயிரத்து 931ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.