நாடாளுமன்றத்தில் வேளாண் சட்ட வரைபுகள் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய விவசாயத்துறை வரலாற்றில் முக்கிய திருப்பம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்ட வரைபுகள் விவசாயத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தையும், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதையும் உறுதிசெய்யும் என அவர் தனது ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தக மற்றும் வணிக சட்டவரைபு, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த வரைபு ஆகிய இரண்டு வரைபுகள், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “இந்திய விவசாய வரலாற்றில் இது முக்கியமான தருணமாகும். கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு எனது வாழ்த்துக்கள்!
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டவரைபுகள் மூலம் விவசாயத்துறையில் முழுமையான மாற்றம் ஏற்படுவதுடன் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.
இடைத்தரகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்திய விவசாயிகள் பல ஆண்டுகளாக இன்னல்களை அனுபவித்தனர். தற்போது நிறைவேற்றப்பட்ட சட்ட வரைபு மூலம் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து அவர்கள் விடுபட்டுள்ளனர். இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாவது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்வாதாரமும் மேம்படும்” எனத் தெரிவித்துள்ளார்.