இந்தியாவில் மாட்டுச்சாணம், சிறுநீர் கொரோனாவை குணப்படுத்தாதென பதிவிட்ட ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் திக்கேந்திர சிங் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் .
கொரோனா வைரஸ் பாதிப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திக்கேந்திர சிங் கடந்த 13 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பிற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பால் பாஜக தலைவர் திக்கேந்திர சிங் உயிரிழந்தது தொடர்பாக அம்மாநிலம் இம்பாலாவை சேர்ந்த கிஷோர் சந்திர வாங்கேம் என்ற ஊடகவியலாளரும், எரேந்திரோ லிசோம்பம் என்ற சமூக செயற்பாட்டாளரும் தங்கள் சமூகவலைதளமான பேஸ்புக் பக்கங்களில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தனர்.
பத்திரிக்கையாளர் கிஷோர் சந்திர வாங்கேம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாட்டுச்சாணமும், மாட்டுச்சிறுநீரும் கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யாது.
ஆதாரமற்ற வாதங்கள். நாளை நான் மீன் சாப்பிடப்போகிறேன். ஆழ்ந்த இரங்கல் (ஆர்.ஐ.பி. RIP)’ என பதிவிட்டிருந்தார்.
சமூக செயற்பாட்டாளரான எரோந்திரோ லிசோம்பம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான மருந்து மாட்டுச்சாணம் மற்றும் மாட்டுச்சிறுநீர் அல்ல.
கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து அறிவியல் மற்றும் பொதுஅறிவு. பேராசிரியரே ஆழ்ந்த இரங்கல் ‘(ஆர்.ஐ.பி. RIP)’ என பதிவிட்டிருந்தார்.
ஊடகவியலாளர் கிஷோர் சந்திர வாங்கேம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரின் சமூகவலைதள பதிவுகள் பாஜக மாநில தலைவர் திக்கேந்திர சிங் கொரோனாவால் உயிரிழந்ததை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக மணீப்பூர் மாநில பாஜக சார்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த புகாரையடுத்து கிஷோர் சந்திர வாங்கோம் மற்றும் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதே பதியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.