புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆண்டுதோறும் ஜூலை 3வது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாக நிறைவடையும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் பாதிக்கப்படுகின்றன.
கடந்தாண்டு ஜூலையில் கூட வேண்டிய மழைக்கால கூட்டத்தொடர் தாமதமாக செப்டம்பரில் கூடியது. பல்வேறு காரணங்களால் 11 நாட்களில் முன்கூட்டியே கூட்டம் முடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. தற்போது, ‘வரும் ஜூலை 19ம் தேதி மழைக்கால தொடரை தொடங்கலாம்.
ஆகஸ்ட் 13ம் தேதி வரை 20 அமர்வுகளாக நடத்தலாம்’ என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை இன்றைய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.