மாமல்லபுரம்: சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள 75-வது சுதந்திர தின நினைவுத் தூணில் நிறுவுவதற்காக நான்கு சிங்கங்களுடன் கூடிய அசோக சக்கரம் கொண்ட வெண்கல சிலை மாமல்லபுரத்தில் தயார் செய்யப்பட்டது.
சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் நினைவுத் தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுகூரும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில் தேர்வு செய்யப்பட்டது. டெண்டர் விடப்பட்டு ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 3ம் தேதி பணிகள் தொடங்கியது. முதல்வர் உத்தரவின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்றது.
நினைவுத் தூணின் அடித்தளம் 10 அடி நீளத்திலும், 10 அடி அகலத்திலும் 55 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூண் மீது நிறுவுவதற்காக 13 அடி உயரத்தில் அசோக சக்கரத்துடன் கூடிய நான்கு சிங்கங்களுடன் கூடிய அசோக சக்கரம் கொண்ட வெண்கல சிலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சிற்ப கலைக்கூடத்தில் தயாரானது.
இந்த வெண்கல சிலை நேற்று இரவு மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு நினைவுத் தூணில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது நினைவுத் தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.