சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முன்னதாக 9.55 மணிக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பேரவைக்குள் அதிமுக உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்த இடத்துக்கு வந்தார். அங்கிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர். அவர்களிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர் இருக்கைக்கு சென்றார்.
நேற்று முன்தினம், நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீது, அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி பேசினார். இதற்கு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அப்போது இருவர் பேசிய சில வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இது சம்பந்தமாக நேற்று அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஆளுங்கட்சி அமைச்சரும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பேரவைக்குள் இதுபோன்று பேசிக் கொண்டது கிடையாது.
பேரவை வளாகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்தால் பேசிக்கொள்வதுதான் வாடிக்கையாக இருந்தது. ஆனால், நேற்று நடந்த சம்பவம் முற்றிலும் புதிய, அதே நேரம் ஆரோக்கியமான நடைமுறையாக இருந்தது.