புதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் பாடத்திட்டத்தில் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பாக சுமார் 41 முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு, தேசிய தேர்வுகள் ஆணையம் மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவை பதில் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவத் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிட்டதற்கு பிறகு பாடத்திட்டங்களை திடீரென மாற்றியது ஏன்?. இந்த மாற்றத்தை அடுத்த ஆண்டு ஏன் மேற்கொள்ளக்கூடாது.
ஒரு சில மாதங்களே தேர்வுக்கு இருக்கும் நிலையில் மாணவர்கள் இதற்கு எப்படி தயாராவார்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இளம் மருத்துவர்களை கால்பந்து போன்று கருத வேண்டாம்.
அவர்களும் நாட்டின் ஒரு அங்கம் தான் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் என ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஒன்றிய அரசு உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் வழங்கிய பிரமாண பத்திரத்திற்கு மனுதாரர்களான மருத்துவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.