Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காடேறிய சஜித் : 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் மக்கள் _ தேசிய காங்கிரஸ் தலைவர்

காடேறிய சஜித் : 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் மக்கள் _ தேசிய காங்கிரஸ் தலைவர்

2 minutes read

தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார். அவரை வைத்து அனுதாப அலைக்கு முயன்று தோற்று போனார்கள். நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள். இப்போது இனவாதம் இல்லாமலாகி நாடு நிம்மதியாக உள்ளது. மக்களை நிம்மதியாக வாழ வழியமைக்காமல் மீண்டும் வந்து பிரதமராக்க போகின்றோம் என்று மீண்டும் பொய்யான மாய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (18) மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்றபோது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கு பிறகு கிழக்குக்கும் எமது மக்கள் வாழும் கிராமங்களுக்கும் அதிகமாக சேவை செய்தது யார் என்பதை நீங்கள் அறிந்து வைக்காமல் இல்லை. ஆனால் இன்னமும் எமது மக்கள் சில புல்லுருவிகளால் பிழையாக வழிநடத்தப்படுகிறார்கள். கிழக்கிலங்கை வாழ் மக்களின் தமிழே அழகானது. இங்குதான் அதிக பிரபலமிக்க குரல்வளமிக்க கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். சாக்குபோக்குகளுக்காக நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்த கூடாது. பொய்யான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவிட்டு வருகின்ற அரசியல் துறை சார்ந்த அதிதிகள் கூறுகின்ற பொய்யான செய்திகளை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது.முஸ்லிம் தலைவர்கள் என்று நாம் நியமிக்கும் எமது தலைவர்களை நாட்டில் யாரிடமும் காட்ட முடியாது. பதவிக்காக மு.கா தலைவர் ஹக்கீம் மதம் மாற கூடியவர் என்று முன்னாள் அமைச்சர் ராஜிதவால் பகிரங்கமாக பேசப்பட்டது.

எங்களிடம் உண்மையும் சத்தியமும் இருக்கிறது. சோதனைகளை தாண்டி பயணித்த தேசிய காங்கிரசை நோக்கி இப்போது மக்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் இப்போதுதான் உண்மைகளை அறிந்து கொண்டு நடக்க ஆரம்பித்துள்ளார்கள். சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் கடந்தகாலங்களில் ஜனாதிபதிகள் தெரிவாகிய வரலாறு இருக்கிறது. எம் மக்களை பிழையாக வழிநடத்தி விட்டு பின்கதவால் அரசில் வந்து இணைத்துக்கொண்ட தலைவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 2005,2010 ஆண்டுகளில் இவர்கள் பின்கதவால் வந்து அமைச்சு பதவிகளை பெற்றதை நாம் கண்ணால் கண்டோம். எங்களிடம் நேர்மை இருக்கிறது அதனால் சத்தியம் வென்றிருக்கிறது. உண்மை நிலையை அறிந்து மக்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் இப்போது மீண்டும் ஒரு பிரதமர் புரளியுடன் வந்திருக்கிறார்கள்.

2015 இல் சிங்கள மக்களின் வாக்குகள் குறைந்தால் மைத்திரி ஜனாதிபதியானார் என்பதை நாம் நன்றாக அறிவோம் அதே போன்று 2019 இல் சிங்கள மக்கள மஹிந்த அலைக்கு அள்ளுண்டு போகும் நிலையில் கூட வடக்கு, கிழக்கு மக்களை கிணற்று தவளை போன்று வைத்திருக்க முஸ்லிம், தமிழ் தலைவர்கள் சரியாக திட்டமிட்டு செயற்படுத்தினார்கள். சாய்ந்தமருது, கல்முனை மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தர முன்னாள் அமைச்சர் பஸில் வந்து பேசிய போது முஸ்லிங்களின் தலைவர்களாக அடையாளப்படுத்தும் காங்கிரசின் இரு தலைவர்களும் உணர்ச்சி போங்க பேசியதை நம்பி முஸ்லிம் மக்களாகிய நாங்கள் தோற்றுப்போனோம் என்றார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் டொக்டர் ஏ.உதுமாலெப்பை, கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் , முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சமூக சேவை, கல்வி, கலை, கலாசார, இலக்கியத் துறைகளுக்கு ஆற்றி வருகின்ற பணிகளுக்காக துறைசார் பிரமுகர்கள் சிலர், மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More