0
இன்றைய உண்ணாவிரத போராட்டம் தேர்தலிற்கான வாக்கு வறுமையை போக்குவதற்கான ஏற்பாடு என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
இன்று பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள குறித்த வர்த்தகர் ஒரு தரப்பினரால் நடைபெறவுள்ள தேர்தல் வாக்கு வறுமையை போக்குவதற்காக ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த வர்த்தகரின் சொத்து மதிப்பிலிருந்து அரச சட்டங்களிற்கமைவாகவே ஆதன வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது, குறித்த ஆதன வரி நடைமுறை தொடர்பில் கரைச்சி பிரதேச சபையில் 2018ம் ஆண்டு ஏகமனதாக அனைத்து தரப்பினராலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் அது வர்த்தமானியிலும் போடப்பட்டது,
வெறுமனே வரி குறைப்பது தொடர்பில் தீர்மானிப்பது தவிசாளரோ சபையோ அல்ல. விலை மதிப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டு அதற்கு சட்ட ரீதியில் வரி அறவீடு செய்யப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபருக்கு பல பகுதிகளிலும் சொத்துக்கள் காணப்படுகின்றது. அவரது சொத்து மதிப்பின் அடிப்படையில் அவருக்கான வரி அறவீடு இடம்பெறுகின்றது.
ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்தது போன்றதான தோற்றப்பாடு காணப்படுகின்றது. உண்மையில் சில பிரதேசங்களில் இப்பிரதேசத்தை விட அதிகளவான அறவீடு காணப்படுகின்றது. நாம் மிக குறைந்த அளவிலான அறவீடுகளையே மேற்கொள்கின்றோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.