கொரோனா வைரஸ் தொற்றினால் சிகிச்சைபெற்றுவந்த சீனப் பெண் முழுமையாக குணமடைந்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். அவரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியும் கலந்துகொண்டார். சீனாவின் ஹூபேய் மாகாணத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வருகை தந்த 43 வயதான சீனப் பெண் கடந்த மாதம் 26 ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண் தொடர்பில் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டது. அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் தொடர்ச்சியான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். அவரது உடலில் வைரஸ் தாக்கம் இல்லையென பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோய் விசேட நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.