2
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்றையதினம் (09-04-2020) விலைக் கட்டுப்பாட்டு பகுதியினர், பொலீஸ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக சில வர்த்தகர்கள் கையும் மெய்யுமாக பிடிப்பட்டுள்ளனர்.
இன்று காலை கிளிநொச்சி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பகுதியினர், பொலீஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில மொத்த வியாபார நிலையங்களுக்கு தீடிரென சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இதன் போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களான பொருட்களான பருப்பு, ரின் மீன், அரிசி போன்ற பொருட்கள் அடையாளம் காணப்பட்டதோடு, அதிகரித்த விலையில் பொருட்கள் விற்பனை செய்தமையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். காலாவதியான பொருட்களும் பிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த வியாபாரி நிலையங்களின் உரிமையாளர்களிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்து தங்களது விற்பனைச் சிட்டை காண்பிக்கப்பட வேண்டும் என எழுத்து மூலம் உத்தரவாத கடிதம் பெறப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற நடவடிக்கையும் உட்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ச்சியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.