நாட்டில் கொரோனா வைரஸால் முஸ்லிம்கள் உயிரிழந்திருந்தபோது, அவர்களை மத உணர்வுகளிற்கு மதிப்பளித்து அடக்கம் செய்ய வேண்டுமென முஸ்லிம் சமூகத்தில் இருந்து கோரிக்கை எழுந்திருந்தது.எனினும், அரசாங்கம் அதை நிராகரித்திருந்த நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கு தொடர்பான சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் என்றால் அது இன, மத, மொழி பாராமல் அனைவருக்கும் பொதுவானது என அரசாங்கம் கூறியதுடன், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறையினர், பிரதமர் உள்ளிட்டவர்கள் இதேவிதமான கருத்தை பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தனர்.இந்தநிலையில் சமூக ஊடகங்களில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம், சிங்கள நபர்களின் இறுதிக்கிரியை பற்றிய படங்களே அவை.
அண்மையில் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் நபர் ஒருவரின் உடலுக்கு மத வழிபாடுகள் செய்ய மதபோதகர் மற்றும் உறவினர்கள் ஓரிருவர் அனுமதிக்கப்பட்டனர். எனினும், மிகச்சில நிமிடங்களே அவர்களிற்கு ஒதுக்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் வைத்து இந்த மத வழிபாடு நடந்தது.இதேநேரம், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் புதைக்கப்பட்ட சிங்களவர் ஒருவரின் இறுதி சடங்கிற்கு முந்தைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்த சிங்கள நபர் பற்றிய விபரம் வெளியாகாத போதும், அந்த இறுதிச்சடங்கானது அண்மையில் வெலிசறை கடற்படை முகாமில் எலிக்காய்ச்சலால் உயிரிழந்து, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடைபெற்ற இறுதிச்சடங்காக இருக்கலாமென கருதப்படுகிறது.
இந்த நிலையில் இறுதிச்சடங்கு சட்டம் ஒரேவிதமானது என்றும் அதில் மதங்கள் பற்றிய பாகுபாடு மட்டுமல்ல, நோய்கள் பற்றிய பாகுபாடும் இல்லை எனவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.