அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஏ.எம்.சுமந்திரன் இப்போது பேசியிருக்கிறார். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் நான் ஏ.எம்.சுமந்திரனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன்.
கைதிகள் சில பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் நீதிமன்றங்களில் பிரகாரம் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிலருடைய வழக்குகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆகவே அரசியல் கைதிகளில் யாராவது ஒருவரையாவது நாடாளுமன்றத்தின் ஊடாகவோ அல்லது ஜனாதிபதி, பிரதமர் ஊடாகவோ பேசி, அந்த பேச்சுவார்த்தையூடாக இத்தனை அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என்ற முடிவுக்கு வந்த எந்த ஒரு அரசியல் கைதியாவது விடுவிக்கப்பட்டாரா?
சட்டத்தரணிகளின் முயற்சியின் ஊடாக சிலர் பிணையில் விடுவிக்கப்படுவதும், சிலர் குற்றவாளிகளாக காணப்பட்டதுதான் நடந்து முடிந்திருக்கின்றதே தவிர ஏ.எம்.சுமந்திரன் கூறுவது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பாலோ அல்லது அதனின் தலைமைத்துவத்தாலோ விடுவிக்கப்பட்டார்கள் என்ற விடயம் நடந்ததாக இல்லை.
அரசியல் கைதிகளுக்காக சில விடயங்களை சாதித்தோம் என்று ஏ.எம்.சுமந்திரன் ஊடங்களின் முன் நின்று பொய் கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். இதே போன்றுதான் காணி விடுவிப்பும்.
வடக்கு மாகாணத்தில் எத்தனை ஏக்கர் காணிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்பட்டது? என்பதை ஏ.எம்.சுமந்திரன் தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் ஆயிரக்கணக்காக ஏக்கர் காணிகள்; இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதுதான் யதார்த்தம்.
அரசுடன் ஆதரவாக இருந்து செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன விடயங்களை சாதித்துள்ளீர்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும்.
புதிய அரசியல்சாசனத்தை கொண்டுவர முடியாமலும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த தீர்வும் இல்லாத நிலையில், நிலங்களை முழுவமையாக விடுவிக்க வைக்காத நிலையில் அரசிடம் இருந்து சில கோடிகளை பெற்றுக் கொண்டு வீதிகளை போட்டோம், கிணறுகளை திருத்தினோம், கோவில்களை கட்டினோம் என்று சொல்வது கூட்டமைப்பால் முடியும்.
எத்தனை போருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அரசுடன் இணைந்திருந்த 5 வருடத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய எந்த அபிவிருத்தி வடக்கில் செய்யப்பட்டது?
தேர்தலுக்காக முழுமையாக தமிழ் மக்களை ஏமாற்றக்கூடிய வகையில் அவருடைய கட்சியில் இக்கின்றவர்களால் கண்டிக்கக் கூடிய விதத்தில் தொடர்ந்தும் கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாத விடயம். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழரசு கட்சிக்குள் தற்போது பல அணிகள் பிரிந்து நிற்கின்றது. புலிகளை எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரிப்பவர்களுமான கூட்டுக்களும் அந்த கட்சிக்குள் உருவெடுத்துள்ளது. இது தமது தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்தவும், தமக்கான விருப்பு வாக்கினை பெற்றுக் கொள்வதற்குமான பிரிவுகளாகவே உள்ளது.
ஒருவரை ஒருவர் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புக்களே தமிழரசு கட்சிக்குள் இப்போது முன்னெழுந்துள்ளது எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.