தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நியமனத்தை யாருக்கு வழங்குவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியலை வழங்கக் கூடாது என சுமந்திரன், சிறிதரன் தரப்பு அடம்பிடிக்க- மறுபக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக மாவையை ஆதரித்து நிற்கிறார்கள்.
தேசியப்பட்டியல் விவகாரத்தில் நேற்றைய நிலவரத்தை தமிழ் பக்கத்தில் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தோம். இந்த விவகாரத்தில் இன்றும் பரபரப்பான பல சம்பவங்கள் இடம்பெற்றன. அந்த விபரங்களை இன்று விலாவாரியாக தருகிறோம்.
தேசியப்பட்டியல் விவகாரதரத்தை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என இரா.சம்பந்தன் நேற்று ஒரு கடிதத்தை மாவை சேனாதிராசாவிற்கு அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டிருந்தோம்.
இதற்கான பதிலையும் நேற்றைய தினமே மாவை சேனாதிராசா அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில், “தேசியப்பட்டியல் விவகாரத்தில் நாம் பேசி முன்னரே கண்ட இணக்கப்பாட்டை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுடையது. அதை நிறைவேற்றுங்கள்“ என குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, தேசியப்பட்டியல் நியமனத்திற்கு மாவை சேனாதிராசாவை நியமிப்பதென ஏற்கனவே முடிவெட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலையில் இரண்டு தரப்பிலும் மௌனம் நீடித்தது.
இன்று மதியத்தின் பின்னர் இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகளின் தலைமைகள் ஒன்றுகூடி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனத்தை மாவை சேனாதிராசாவிற்கே வழங்க வேண்டுமென குறிப்பிட்டு கடிதமொன்றை தயாரித்து, இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்தனர்.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் திடீரென இரா.சம்பந்தனிற்கு ஆதரவளித்து, சம்பந்தன் புகழ்பாடிய ஜனநாயக போராளிகள் இன்று இரா.சம்பந்தனை சந்தித்து, தேசியப்பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராசாவிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுடனான சந்திப்பின் பின்னர் எம்.ஏ.சுமந்திரனை தொலைபேசியில் அழைத்த இரா.சம்பந்தன், தேசியப்பட்டியலில் மாற்றம் செய்வோமா என கேட்டார். அதை பலமாக மறுத்த சுமந்திரன், மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கினால், வடமாகாணசபை தேர்தலில் மக்கள் எதிர்த்து வாக்களிப்பர், அம்பாறையிலும் மக்கள் எதிர்ப்பார்கள் என்றார்.
(தேசியப்பட்டியல் விவகாரத்தில் பகிரங்க செய்தியாளர் சந்திப்பை நடத்தி அம்பாறைக்கு நியமனம் வழங்குவதாக அறிவித்தால், அம்பாறை மக்கள் எதிர்ப்பார்கள் என்ற காரணத்தை கூறி தேசியப்பட்டியலில் மாற்றம்செய்யாமல் விடலாம் என்பதற்காகவே சுமந்திரனின் ஆலோசனையில், துரைரராசசிங்கம் பகிரங்க செய்தியாளர் சந்திப்பு நடத்தியிருந்தார்)
இதன்பின்னர், செயலாளர் தொலைபேசி வழியாக சுமந்திரனை தொடர்பு கொண்டபோதும், தேசியப்பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டாமென தெரிவித்தார்.
இதன்பின்னர் இன்று மாலையில் அவசரஅவசமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு, சுமந்திரன் தரப்பின் தேசியப்பட்டியல் எம்.பியாக கலையரசனின் பெயர் வர்த்தமானியிடப்பட்டுள்ளது.
நன்றி – தமிழ்பக்கம்