வவுனியா- கனகராயன்குளம் பகுதியில் முதியவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதிவர் ஒருவரின் சடலம், கடந்த 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த முதியவரின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் காணப்பட்ட நிலையில் கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
மேலும், சடலத்தை பார்வையிட்ட வவுனியா நீதவான் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். சடலம் கண்டெடுக்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த முதியவரின் களுத்து நெரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருந்ததுடன், அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கனகராயன்குளம்- பெரியகுளம் பகுதியை சேர்ந்த 16,19,18 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு கைது செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர்.