மசகு எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்டம், சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றிய நிலையில் எரிந்துவருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை ஒன்றின் ஊடாக முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கை திருக்கோயில், தம்பிலுவில், உமிரி, பொத்துவில், கல்முனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்களை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் தீ விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பல், பனாமா அரசுக்குச் சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலாகும்.
கப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் அவர்களின் உதவிக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பற்றியுள்ள கப்பலின் தற்போதைய நிலையின் அடிப்படையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருளுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.