இணைய இணைப்பு இல்லாததால் மாணவர்கள் படும் சிரமங்கள் குறித்து கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலின் எதிரொலியாக அந்த பகுதியில் இணைய இணைப்பு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
மத்துகம, பதுரெலிய, கெலிகந்த பகுதியில் இணைய இணைப்பு இல்லாததால், இணையவழி கற்கையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
சரியான இணைய இணைப்பை கிடைக்காமல் மாணவர்கள் காடு, வீதியென அலைந்து திரிந்து கற்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இலங்கை முழுவதும் இந்த படங்கள் வைரலாகின.
இதையடுத்து, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (டி.ஆர்.சி.எஸ்.எல்) அதிகாரிகள் இன்று பதுரெலியவுக்கு விஜயம் செய்தனர்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் இயக்குனர் ஒஷாத சேனநாயக்கவின் பணிப்பில் நடந்த இந்த செயற்திட்டத்தில், அங்கு தொலைதொடர்பு பொறியிலாளர்களும் அழைக்கப்பட்டனர். கெலிங்கந்த பகுதிக்கு மட்டுமல்லாமல் அருகிலுள்ள பகுதிகளுக்கும் 4 ஜி இணைப்பை வழங்குவதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நாட்டின் அனைத்து பகுதியிலும் 4ஜி இணைய இணைப்பை உறுதி செய்ய அரசு உத்தரவாதமளித்துள்ளது, இதற்காக ஆரம்பிக்கப்பட்ட கமத சன்னிவேதன திட்டத்தின்படி விரைவில் அந்த பகுதிக்கு இணைய இணைப்பு வழங்கப்படும் என டி.ஆர்.சி.எஸ்.எல் தெரிவித்துள்ளது.