மாவீரர் நாள் நினைவுகூரலைக் கடைப்பிடிக்க முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தணித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்கள், படங்களைக் காட்சிப்படுத்தி அந்த அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தபோதும் சாதாரண குற்றிவியல் சட்டத்தின் கீழ் அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குத் தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால், யாழ். ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக இன்று மாலை 05:50 மணியளவில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரன், யாழ். ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான நிலையில் கைதானார்.
இந்நிலையில், அவர் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.