யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தொற்று நோயியல் மருத்துவமனைக்கு இவர்கள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கி வந்தது.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 30 பேரும், முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிறிதொரு இடத்தில் இடம்பெற்று வந்த நிலையில் வழமை போன்று வைத்தியசாலை செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் சகல வசதிகளுடனான வைத்தியசாலை அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
அதி நவீன கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தொற்று நோயியல் வைத்தியசாலை கொரோனா சிகிக்சை நிலையமாக இன்று தனது சேவையை ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.