ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானமானது எவ்விதமாக அமைய வேண்டும் என்பது தொடர்பிலான யோசனைகளை உள்ளடக்கிய வரைபொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தயாரித்திருந்தார்.
அந்த வரைவுக்கு தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள மக்கள் ஆணைபெற்ற ஏனைய அரசியல் தரப்புக்களான தமிழ் மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் அங்கீகாரத்தினையும் பெறும் பொருட்டு அந்த வரைபினை கஜேந்திரகுமார் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் இணக்கப்பாட்டைப் பெறுவதற்காக கைளித்திருந்தார்.
அவர்கள் இணங்கும் பட்சத்தின் ஒட்டுமொத்த மக்கள் ஆணைபெற்ற தமிழ்த் தரப்பின் ஏகோபித்த முன்மொழிவாக அவ்வரைபினை ஐ.நா.மனித உரிமைகள் போவையிலும் மற்றும் இலங்கை தொடர்பான விவகாரங்களை கையாளவுள்ள பிரித்தானியா தலைமையிலான ஏனைய இணை அணுசரனை நாடுகளிடத்திலும கையளிப்பதே திட்டமாக இருந்தது.
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுமந்திரனின் யோசனைகள் அடங்கிய வரைவினை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவருடைய முன்மொழிவானது, இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால நீட்டிப்பை வழங்குவதாக இருக்கின்றது என்றும் மிகப்பலவீனமானதொன்றாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே இலங்கை விவகாரத்தினை மேலும் கால விரயம் செய்து முடக்குவதாகவுமே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இருதரப்புக்களுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு கையொப்பமிட முடியுமாக இருந்தால் பரிந்துரைகளை செய்யுங்கள் என்று ஏற்கனவே சுமந்திரன் தன்னிடத்தில் கூறியுள்ள நிலையில் அவருடைய யோசனைகள் அடங்கிய வரைவை முழுமையாக மாற்றியமைக்கும் வகையிலேயே தமது பரிந்துரைகள் காணப்படும் என்பதால் அவ்விதமான முயற்சியொன்று பயனற்றதாகவே கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன், சுமந்திரனின் யோசனை வரைவு தொடர்பாக பதிலுரைத்துள்ளதுடன் தனது நிலைப்பாடுகள் சிலவற்றை உள்ளீர்க்குமாறும் கோரியுள்ளார்.
மேலும் விக்னேஸ்வரன் சுமந்திரனுக்கு அனுப்பிய பதிலில், உங்கள்(சுமந்திரன்) பரிந்துரையானது இனவழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திற்கு முன்னர் அளித்த சலுகைகளை சர்வதேச நாடுகள் மீண்டும் அளிக்க வேண்டும் என்ற தொனிப்படவே அமைந்துள்ளது. அதில் மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் இந்தக் கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீங்கள் முன்வைக்க முன்வந்துள்ளீர்கள். உங்கள் ஆவணத்தையும் பரிந்துரைகளையும் எவ்வாறு நாம் ஏற்க முடியும்? அவ்வாவணத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்பபடுத்துமாறு மனித உரிமைகள் பேரவையை கோரும் அதேவேளை இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றை ஆராய்வதற்கும் கண்காணிப்பதற்கும் இலங்கைக்கான ஐ.நா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் பொறுப்புக்கூறல் மற்றும்
போர்க்குற்ற செயற்பாடுகளுக்கு அனுசரணை செய்யும்வகையில் சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றை நிறுவுமாறும் மனித உரிமைகள் பேரவையை கோருவதுமே இன்றைய சூழ்நிலையில் பொருத்தமானது என்றும் விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ளர்.
தனது மேற்படி முன்மொழிவுகள் அடிப்படையில் ஒரு கடிதத்தை தயாரித்து மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கும் நடவடிக்கையை முழுமனதுடன் மேற்கொள்ளுமாறும் அதற்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் சுமந்திரனுக்கு கூறியுள்ளார்.