Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

2 minutes read

நாடளாவிய ரீதியில் இனங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த திங்கட்கிழமை முதல் சடுதியான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியின் பின்னரான காலத்தில் கடந்த திங்கட்கிழமையே முதன்முதலாக நாளொன்றில் ஆயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததுடன், வாரத்தின் நான்காவது நாளான நேற்றும் 842 தொற்றாளர்களுடன் அதேநிலை தொடர்கின்றது.

எனினும் தொற்றினால் ஏற்படும் மரணங்களில் எண்ணிக்கையில்  பாரிய மாற்றமொன்று அவதானிக்கப்படாத நிலையில், நேற்றைய தினமும் 40 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை கொரோனா வைரஸ் பரவல் அலைகளையும் திரிபடைந்த வைரஸ் தொற்றையும் கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், தொற்றுப்பரிசோதனைகளையும் வைரஸ் திரிபுகள் குறித்த ஆய்வுகளையும் விரைவாக முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப மற்றும் ஆய்வுகூட வசதிகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நோய்த்தடுப்பு மற்றும் நுண்ணுயிர் மருத்துவபீடத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே வலியுறுத்தியுள்ளார்.

அதிபர், ஆசிரியர், கல்விசாரா ஊழியர்களுக்குத் தடுப்பூசி

பாடசாலைகளை மீளத்திறக்கும் நோக்கில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஒருவாரகாலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர்களின் வயதை அடிப்படையாகக்கொண்டு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாகாண சுகாதாரசேவைப் பணிப்பாளர்களுக்கும் பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டவர்களுக்குத் தனிமைப்படுத்தல் இல்லை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதருபவர்களில் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இங்கு வந்திறங்கியதன் பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக வேண்டிய அவசியமில்லை.

மேலும் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் அவர்களது பயணத்திற்கு முன்னரான 72 மணித்தியால நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை (ஆங்கிலமொழி மூலம்) தம்முடன் வைத்திருப்பது கட்டாயம் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை ஏற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் தடுப்பூசி அட்டையையோ அல்லது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரத்தையோ சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வுகள் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள்

கொவிட் – 19 வைரஸ் பரவல் இன்னமும் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாத நிலையில், திருமண நிகழ்வுகளை நடாத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் இன்றைய தினம் வெளியிடப்படும் என்று சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் மரணங்களும்

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணி வரையான காலப்பகுதியில் 842 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 40 கொவிட் – 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இவை நேற்று முன்தினம் புதன்கிழமை பதிவானவையாகும்.

அதன்படி நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 268,953 ஆக உயர்வடைந்திருப்பதுடன், தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,391 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று காலை 10 மணிவரையான தகவல்களின்படி தொற்றாளர்களில் 239,584 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன் 25,741 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More