Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோன தொற்றாளர் தொகையில் பெருமளவு வீழ்ச்சி நிலை!

இலங்கையில் கொரோன தொற்றாளர் தொகையில் பெருமளவு வீழ்ச்சி நிலை!

1 minutes read

போக்குவரத்துக்கட்டுப்பாடுகள் மற்றும் செயற்திறனான தடுப்பூசி வழங்கல் ஆகியவற்றின் பிரதிபலனாகவே நாடளாவிய ரீதியில் பதிவாகும் கொவிட் – தொற்றாளர்கள் மற்றும் கொவிட் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பதிவாகும் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அண்மையில் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாகவே தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை. மாறாக அண்மையில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடு மற்றும் வினைத்திறனான தடுப்பூசி திட்டம் ஆகியவையே இதற்கு பிரதான காரணங்களாகும் என அவர் தெரிவித்தார். ‘நிச்சயமாக வசந்தம் உதயமாகும்’ என்ற தலைப்பில் ஊடக அமைச்சுடன் இணைந்து இலங்கை இலத்திரனியல் ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மைக்காலத்தில் பதிவாகும் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவான வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகிவந்த கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி கடந்த இருமாதங்களுக்கு முன்னர் தொற்றினால் வைத்தியசாலைகளின் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்பட்டதுடன் அதனை முகாமைசெய்வது சவாலுக்குரிய விடயமாக இருந்தது. இருப்பினும் அண்மையில் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. அதன் காரணமாக வைத்தியசாலைகளில் கொவிட் – 19 தொற்றாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரிவுகளில் கட்டில்கள் எஞ்சியிருக்கின்றன. அதேபோன்று முன்னர் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அவதானநிலை உருவாகியிருந்தபோதிலும், தற்போது அது இல்லாமல் போயுள்ளது. ஆகவே அண்மைக்காலத்தில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரதிபலன்களாக இவற்றைக் கருதமுடியும்.

அதுமாத்திரமன்றி தொற்றுக்குள்ளான போதிலும், நோய்நிலைமை தீவிரமடையாதபட்சத்தில் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவதனாலும் வைத்தியசாலைகளில் நெருக்கடி குறைந்திருக்கின்றது. நாடளாவிய ரீதியில் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கல் பணிகளும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More