இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர காவல் படையியடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று(23) முற்பகல் 9.20 மணியளவில் குறித்த சடலம் கையளிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர், தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கோவளம் கடற்பரப்பில், கடந்த 18 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த இந்திய மீனவரின் படகு, இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில், ஒருவர் காணாமல்போயிருந்தார்.
அவரைத் தேடும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்திருந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி அவரின் சடலம் மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, தடயவியல் மற்றும் நீதிவான் பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த மீனவரின் சடலம் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.