அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட 3 பேருக்கு மாவீரர் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவீரர் தின நினைவேந்தலை எதிர்வரும் 27ஆம் திகதி வரை செய்வதற்கு குறித்த மூவருக்கும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து, கட்டளை ஒன்றை வழங்கியுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி, குட்டிமணி என்றழைக்கப்படும் முன்னாள் போராளி நாகமணி கிருஷ்ணபிள்ளை, நாகலிங்கம் சங்கரப்பிள்ளை ஆகிய 3பேர் தலைமையில் தடை செய்யப்பட்ட தமிழீழ் விடுதலைப் புலிகளின் அமைப்பில் மரணித்தவர்களுக்கு விளக்கேற்றி நினைவு கூர இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்தே இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதுடன் மீண்டும் தூண்டுகின்ற செயற்பாடு காணப்படுவதால், இந்த நினைவு கூரல் சம்பவம் நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை மேற்குறித்தவர்களுக்கும் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களுக்கும் எதிராக 1979 ம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவை (106)1, (106)2 பிரிவின் கீழ் தடை உத்தரவு ஒன்றை கோரி, திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.