இலங்கை சுங்கம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்னவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுங்கம் தொடர்பில் எழுந்துள்ள மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 6 பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்று கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
சுங்க அதிகாரிகள், சுங்க தொழிற்சங்கத்தினர், அரச மற்றும் தனியார் பிரிவு அதிகாரிகள், சேவை பெறுநர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் சுமார் ஒரு வருடம் தகவல்கள் பெறப்பட்டன.
இதனூடாக தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையானது 117 பரிந்துரைகளைக் கொண்டுள்ளதுடன், 530 பக்கங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புகளை நிறைவேற்றும் போது, இலங்கை சுங்க திணைக்களமானது, நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளின் போது சிறந்த முறையிலும், செயற்றிறன் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.