யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் திங்கட்கிழமை (04) தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வேளை , அருகில் இருந்த 20 லீட்டர் கொள்வனவு உடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றினை எடுக்க முற்பட்ட வேளை , வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளதாக அறிய வருகிறது.
அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்தியசாலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.