Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்

2 minutes read

நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பிரதம நிதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்)உறுப்புரைகள் மற்றும் அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரை ஆகியவற்றின் பிரகாரம் பாராளுமன்றில் இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க சபைக்கு அறிவித்தார்.

ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதை தொரடந்து சபையில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனது வாழ்க்கை பாராளுமன்றம், பாராளுமன்றில் அதிக காலத்தை செலவழித்துள்ளேன் என குறிப்பிட்டதை தொடர்ந்து தனது பதவி பிரமாணம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற வேண்டும் என சபாநாயகரிடம் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதற்கமைய 8 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தி பாராளுமன்ற செயலாளர் நாயகம் மூன்று நாட்களுக்குள் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் சிரேஷ்ட அரசியல்வாதியாக கருதப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 6 தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளதுடன்,இரண்டு தடவைகள் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக 2021 ஜுன் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

பொருளாதார நெருக்கடி,மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த மே மாதம்இ09ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மே மாதம் 12ஆம் திகதி பிரரமராக பதவியேற்றார்.

அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் அளவிற்கு தீவிரமடைந்த காரணத்தினால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்.

ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 37(1) உறுப்புரையின் பிரகாரம் பதில் ஜனாதிபதியாக நியமிக்கபட்டார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 15ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அன்றைய தினமே பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவி பிரமானம் செய்துக்கொண்டார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நேற்று முன்தினம் வேட்பு மனுத்தல் தாக்கல் செய்யபட்டது.பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திஸாநாயக்க,ரணில் விக்கிரமசிங்க மற்றும் டலஸ் அழகபெரும ஆகியோர் பாராளுமன்றத்தின் ஊடான ஜனாதிபதி தெரிவிற்காக போட்டியிட்டனர்.

செல்லுபடியான 223 மொத்த வாக்குகளில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும்,டலஸ் அழகபெரும 82 வாக்குகளையும்,அனுரகுமார திஸாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றுக்கொண்டார். வாக்குகளுக்கமைய நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More