இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) காலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
யுவான் வோங்-05 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய இந்த கப்பல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை தரித்திருக்கும் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்து.
இந்நிலையில், சீனாவின் யுவான் வோங் -05 அறிவியல் மற்றும் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள அமைப்பு இயங்கி முறைமையைப் பேணுதல் மற்றும் இலங்கை கடற்பரப்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள கூடாது என பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்ட நிபந்தனை தெளிவுபடுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இதையடுத்தே சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வோங் – 5 கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.