வடக்கு மாகாணத்தில் படையினரின் மர்ம மரணங்கள் தொடர்கின்றன.
அந்தவகையில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படை சிப்பாயின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கண்டியைச் சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (வயது 34) எனும் கடற்படைச் சிப்பாய்யே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இவ்வருடம் இதுவரை 15 படையினரின் (இராணுவம், கடற்படை, விமானப்படை) சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 12 சடலங்கள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தன.
நேற்று மீட்கப்பட்டிருந்த சடலத்தைத் தவிர ஏனைய 14 சடலங்களில் 10 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்றும், 2 பேர் சக சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 2 பேர் திடீர் சுகயீனம் காரணமாக இறந்துள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.