Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பாறையில் தமிழ்ச் சமூகத்தை அழிக்கும் செயலில் ஹரீஸ்! – கலையரசன் காட்டம்

அம்பாறையில் தமிழ்ச் சமூகத்தை அழிக்கும் செயலில் ஹரீஸ்! – கலையரசன் காட்டம்

1 minutes read

அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், தமிழர்களுடைய எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

-இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களாக இருக்கின்ற நாங்கள் குறைந்த நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எம்மை நசுக்கி ஆளுகின்ற அரசியல் தலைவர்கள், பெரும்பான்மை சிங்கள மக்களை விட சகோதர முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தமிழர்களுடைய எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளிலே இருந்து கொண்டிருக்கின்றார்.

அவரின் செயற்பாட்டின் மூலம் இந்த இனங்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமை இல்லாமல் போய்விடும் நிலமை அதிகமாகவுள்ளது.

கல்முனையில் தமிழ்ச் சமூத்தை அழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தை முடக்குவதற்குப் பல குழுக்களை உருவாக்கியும் கிராம ரீதியான எல்லையை நிர்ணயித்தும் குளங்களை மண்போட்டு நிரப்பியும் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களைக் கபளீரம் செய்தும் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாட்டைச் செய்து வருகின்றார்.

நான் ஏனைய சமூகங்களை இணைத்துப் பயணிக்கின்ற அரசியல்வாதியாக இருந்திருக்கின்றேன். அவர் இன்றும்கூட தமிழர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இரட்டை வேடம் போட்டவர்கள் அல்லர்; ஒரு சமூகத்தை அழிக்கின்ற பணிகளை முன்னெடுத்தவர்கள் அல்லர். அந்தப் பணியை முன்னெடுக்கின்ற ஓர் அரசியல்வாதியே கல்முனை பிராந்தியத்தில் உள்ள நாடாளுமன்ற உறப்பினர் ஹரீஸ்.

இந்நாட்டிலே தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டுவரும் ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான். அந்தத் தமிழ் பேசும் என்பது தமிழர்களையும், முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

நாங்கள் ஒரே சிந்தனை; ஒரே கொள்கை; ஒரே கோட்பாடு. நாங்கள் வருகின்ற அரசுக்கு எல்லாம் கையை உயர்த்திவிட்டு காலில் விழுபவர்கள் அல்லர். நாங்கள் துணிகரத்தோடு உண்மையை – நியாயத்தை – அநீதியை தட்டிக்கேட்கின்ற அரசியல்வாதிகளாகச் செயற்படுகின்றோமே தவிர சலுகைகளுக்கும் துணையாக இருந்து செயற்படுபவர்கள் அல்லர் என்பதை ஹரீஸுக்கு சொல்லி வைக்கின்றேன்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More