Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழர் சுயநிர்ணய உரிமையை அடைவதே ஒரே வழி! – ஸ்ரீநேசன் தெரிவிப்பு

தமிழர் சுயநிர்ணய உரிமையை அடைவதே ஒரே வழி! – ஸ்ரீநேசன் தெரிவிப்பு

2 minutes read

“தமிழர்கள் தம்மைத்தாமே ஆள்வதற்கான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை ஏற்கத்தக்கது என்பதை அடிப்படைவாத ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அவர்களது அதிகாரிகளும் உணர்த்தி வருகின்றார்கள்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி மகேஷ் (சிங்களவர்) என்பவரால் வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது.

அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவருமில்லை, அவ்வாறு இருந்தால் அவர்கள் விடுதலைப்புலிகளால்தான் காணாமல் ஆக்கட்டிருப்பார்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 50 பேரளவில் வெளிநாடுகளில் உள்ளார்கள், படையினரால் எவரும் காணாமல் ஆக்கப்படவில்லை என்பதே அந்த அறிக்கையாகும்.

இலங்கை அரசின் இன அழிப்புக்கு சாதகமாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.

அடிப்படைவாதப் பொய்யர்களிடம் இருந்து அணுவளவும் உண்மைகளையோ நீதியையோ எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இது மேலுமொரு சான்றாக அமைகின்றது.

மேலும், உள்நாட்டுப் பொறிமுறை என்பது பொய்யும் புரட்டும் கலந்த உள்நாட்டு மக்களை மட்டுமல்லாமல், உலகத்தையே ஏமாற்றும் கோயபல்ஸ் செயற்பாடு என்பதை உணரமுடிகின்றது.

கிட்லரின் முக்கிய ஆலோசகரில் ஒருவர்தான் இவர். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லும் போது அதனை மக்கள் நம்பிவிடுவார்கள் என்பதே கோய பல்ஸின் ஏமாற்றுவித்தையாகும். அது அன்றைய கிட்லரின் சர்வாதிகார ஆட்சிக்குப் பொருந்தி இருக்கலாம்.

21 ஆம் நூற்றாண்டின் இன்றைய காலத்தில் இனவாத அதிகார வர்க்கத்தினர் கோயபல்ஸின் ஆத்மார்த்த சிஷ்யர்களாகி விட்டதில் ஆச்சரியம் இல்லை.

காணமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக நியமிக்கப்பட்டவர்கள் அதைத்தவிர எதைக் கூறுவார்கள்? உண்மையைக் கண்டறிதல், நீதியை வழங்குதல், மீண்டும் நிகழாமல் பாதுகாத்தல், நிலையான சமாதானத்தை ஏற்படுத்தல் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை சொன்னதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிவிட்டது.

அடிப்படைவாத செவிகள், கண்கள், மூளைகள், தசைகள், எலும்புகள், இரத்தம் என்பவற்றால் ஆக்கப்பட்டவர்கள் சொல்வது ஒன்றுதான். அதாவது பல்லின மக்களை சமத்துவமாக அரவணைத்து ஆளும் தகுதி தமக்கு இல்லவே இல்லை என்று கூறுகின்றார்கள்.

எனவே, தமிழர்கள் தம்மைத்தாமே ஆள்வதற்கான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை ஏற்கத்தக்கது என்பதை அடிப்படைவாத ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அவர்களது அதிகாரிகளும் உணர்த்தி வருகின்றார்கள்.

அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் காணாமல் ஆக்கப்பட்ட ஆணைக்குழுவின் இனவாத அறிக்கையாகும்.

அடிப்படைவாதிகளிடம் இருந்து உண்மை, நீதியை எதிர்பார்ப்பதென்பது கல்லியே நார் உரித்து அதனைக் கயிறாகத் திரித்து மலையைக் கட்டி இழுப்பதாகவே அமையும்.

13 ஆண்டுகளாக மட்டுமல்ல 74 ஆண்டுகளாக 74 சதவீதமான சிங்கள மக்களில் வாக்குகளை மையமாகக் கொண்ட அதிகாரபோக ஆட்சியே நடைபெறுகின்றது. பல்லின மக்களுத்தான பொதுமையான நீதியான ஆட்சி இல்லை.

பூகோள அரசியல் தேவைகளுக்காக நசுக்கப்படும் தகரைப்பற்றைகளாகவே ஈழத்தமிழர்கள் இன்றும் நோக்கப்படுகின்றார்கள். தமிழர்கள் ஒற்றுமையாக திரண்டு ஒரே குரலில் நின்று சுயநிர்ணய உரிமையை அடைவதே ஒரே வழியாகும்” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More