தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசுடன் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது.
இதன் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
எனினும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையிலேயே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அம்மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுக்கள் ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்தார். இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.