இலங்கையின் 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. பாதீட்டு கூட்டத்தொடரை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் நிதி அமைச்சரின் பாதீட்டு உரை மாத்திரமே இடம்பெறும்.
நாளை முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரை பாதீடு மீதான விவாதம் இடம்பெறும். டிசம்பர் 8 ஆம் திகதி மாலை இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
கொரோனா பெருந்தொற்றையடுத்து ஏற்பட்ட முடக்கம், சுற்றுலாத்துறை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. அதன்பின்னர் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியதால் நிலைமை மோசமானது.
கடனை மீளச் செலுத்த முடியாத நாடு, வங்குரோத்து அடைந்த நாடு என இலங்கை சர்வதேச மட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், கடும் சவால்களுக்கு மத்தியிலும் பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளதால் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் அறிவதற்கு பல தரப்புகளும் ஆர்வமாக உள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டுக்கான அரச செலவீனம் ஆயிரத்து 785 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களுக்காக சில சலுகைத் திட்டங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மறுபுறத்தில் வரி வகிதங்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்காக, வரிக்கொள்கைகளில் ஏற்பட்டுள்ள – ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் குறித்தும் நிதி அமைச்சர் விளக்கங்களை முன்வைக்கவுள்ளார்.