நியூயோர்க்கிலிருந்து செயற்படும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய – பசிபிக் திணைக்கள அரசியல் மற்றும் சமாதான முன்னெடுப்புப் பணிப்பாளர் பீட்டர் டியூவை தமிழ் முற்போக்குக் கூட்டணி சந்திக்கவுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராய விரும்புகின்றோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பில் கொழும்பில் உள்ள ஐ.நா. காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர் பீட்டர் டியூவுக்கு வழங்கி வைக்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன் ஐ.நா. உலக உணவுத் திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐ.நா. அதிகாரிகளுக்கு மேலதிக விளக்கங்கள் காத்திரமாக வழங்கப்படும் என்றும் மனோ கணேசன் எம்.பி. கூறினார்.