‘தேர்தலைப் பிற்போடுகின்ற சூழ்ச்சிக்கு எதிரான எதிர்ப்பு’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று அரசுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதைக் கலைக்கப் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தாமரைத் தடாகம் முதல் நகர மண்டபம் வரையான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 26 பேருக்கு கொழும்பு வைத்தியசாலை சதுக்க வலயத்துக்குள் பிரவேசிக்க, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, இருதய வைத்தியசாலை மற்றும் மருதானை பிரதான வைத்தியசாலை சதுக்கங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய வகையில் போராட்டக்காரர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து டீன்ஸ் வீதி, சீமன்ஸ் வீதி சந்தி வரையிலான வீதி மற்றும் நடைபாதைகளை மறித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.