சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பான சோதனைகள், விசாரணைகளை துரிதப்படுத்த சுங்க கட்டளை சட்ட திருத்த பரிந்துரைகளை முன்வைக்க அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற சோதனைகள், விசாரணைகள் மற்றும் ஏனைய ஏற்புடைய செயன்முறைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீண்டகாலம் எடுப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால் குறித்த பொருட்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுதல் மற்றும் அழிவடைதல் உள்ளிட்ட பல பொருளாதார நட்டங்கள் ஏற்படுவதால், அத்தகைய பொருட்கள் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் கடைப்பிடிக்கப்படும் தற்போது நிலவுகின்ற செயன்முறைகளைத் துரிதப்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கமைய, குறித்த விடயங்களை ஆராய்ந்து, தேவையாயின் சுங்கக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவைக் குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்டத்துறை அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்திலும் அமுனுகம, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்டோர் குறித்த அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.