Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெடுக்குநாறிமலை அராஜகம்: எவரும் கைதாகவில்லை!

வெடுக்குநாறிமலை அராஜகம்: எவரும் கைதாகவில்லை!

1 minutes read

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆதிலிங்கம் உள்ளிட்ட சிலைகள் சேதமாக்கப்பட்டு, அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது,

“சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் வவுனியா நீதிவான் நீதிமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் (30) சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.

அத்துடன். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, எதிர்வரும் 10 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.” – என்றார்.

வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்குத் தடை ஏற்படுத்தும் வகையில், தொல்பொருள் திணைக்களத்தினரும், நெடுங்கேணி பொலிஸாரும் இணைந்து தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

எனினும், கடந்த வருடம் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவானால் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த 26ஆம் திகதி, ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு வீசப்பட்டிருந்ததுடன், பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரங்களும் தகர்க்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, குறித்த சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், வவுனியாவில் கண்டனப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில், விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

எனினும், இதுவரையில், சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More